உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை : 100 பேர் கைது

சேலத்தில் வருமானவரித்துறை அலுவலகம் முற்றுகை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் 100 பேர் கைது

    சேலத்தில் மத்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் முற்றுகையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் சேலம் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்ட்த்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் தலைமை தலைமை தாங்கினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் மாரிமுத்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் மாவட்ட அமைப்பாளர் பிந்துசாரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் க.சேகர், தமிழர் தேசிய இயக்கம் சிவப்பிரியன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரம் திரளாக கலந்து கொண்டனர்.

    "சிங்களன் உனக்கு பங்காளியா? தமிழன் உனக்கு பகையாளியா? இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக  புறப்பட்ட தோழர்கள் 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் அப்பகுதியில் உள்ள ஓரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT