உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

தஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 50க்கும் மேற்பட்டவர்கள் கைது

தஞ்சையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
50க்கும் மேற்பட்டவர்கள் கைது

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து தஞ்சை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள்கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் தஞ்சை கோட்டைச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் சோலை மாரியப்பன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிவகாளிதாசன் உள்ளிட்ட  பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

    இப்போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

    "சூனியக்காரி சோனியாவின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடு" என்பனப் போன்ற முழக்கங்களுடன் பாத்திமா நகரிலிருந்து பேரணியாக புறப்பட்ட தோழர்கள்  50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் வ.உ.சி. நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT