உடனடிச்செய்திகள்

Friday, February 20, 2009

கோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம் : 100 க்கும் மேற்பட்டவர்கள் கைது

கோவையில் நடந்த முற்றுகைப் போராட்டம்
தமிழர் ஒருங்கிணைப்பு அமைப்பினர்
100 க்கும் மேற்பட்டவர்கள் கைது

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவும் இந்திய அரசைக் கண்டித்து கோவை மத்திய வருமானவரித் துறை அலுவலகம் இன்று காலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

    ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி புரிந்து வருகின்றது. தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இந்திய அரசு சிங்கள அரசுக்கு ஆயதங்கள் வழங்குவதால் தமிழத்தில் உள்ள இந்திய வருமானவரித் துறை அலுவலகங்களை முற்றுகையிடப் போவதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு உள்ளிட்ட தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று(20-02-2009) காலை 10.00 மணியளவில் கோவை பந்தயச் சாலையில் அமைந்துள்ள மத்திய அரசு வருமானவரித் துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை மாவட்டச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாவட்ட அமைப்பாளர் தமிழரசன்,  தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பாரதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    "ஈழத்தமிழனைக் கொல்லும் இந்திய அரசே வருமானவரித் துறை அலுவலகங்களை இழுத்து முடுவோம்" என்பனப் போன்ற   முழக்கங்களுடன் அரசினர் கலைக் கல்லூரியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தோழர்களை காவல்துறையினர் வழிமறித்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தலைவர்களும் தோழர்களும் கோவை பாப்பநாயக்கம்பாளையத்தில் உள்ள பாடியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT