உடனடிச்செய்திகள்

Wednesday, February 22, 2012

“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவுக்கு இல்லை” - பெ.மணியரசன் பேச்சு!






“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவுக்கு இல்லை”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“தமிழக மின்வெட்டைப் போக்க நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கூறினார்.

தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று(21.02.2012) தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது.

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் கூட தமிழக முதலமைச்சர் செயலலிதா மின்வெட்டை குறைப்பதற்கு பதிலாக அன்றாடம் அதிகப்படுத்திக் கொண்டே வந்துள்ளார். சென்னை தவிர்த்த மற்ற தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 12 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது. செயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகத்திற்கும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் கேரளாவிற்கும், பாலாற்றைத் தடுக்கும் ஆந்திராவிற்கும் போய்க் கொண்டிருக்கிறது. அதை தமிழ்நாட்டிகே முழுவதுமாக இந்திய அரசு தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைப்பதற்கான துணிச்சல் முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லை.

இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகம் தழுவிய அளவில் நடத்துகின்ற இவ்வார்ப்பாட்டங்கள் நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே என்ற கோரிக்கையை வெளிப்படுத்தும் ஓர் அறிமுகப் போராட்டம் தான். தமிழக மக்கள் புதிய வடிவங்களில் இதே கோரிக்கைக்காக போராடி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும். பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தங்குதடையற்ற மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழக மின்வெட்டை நீக்க உடனடி வாய்ப்பு இவை தான்” என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், முன்னாள் மின்வாரிய செயற்பொறியாளர் தோழர் பொன். ஏழுமலை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை
கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அருகில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும், மாலை 5.30 மணிக்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்களை காவல்துறை கைது செய்தது. த.தே.பொ.க. தோழர் மா.தளவாய் சாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர், கிளைச் செயலாளர்கள் தோழர் கு.இராசேசுக்குமார், தோழர் பிறை.சுரேஷ், த.இ.மு. அமைப்பாளர் தோழர் வெங்கடேசு உள்ளிட்ட 10 தோழர்கள் கைது செய்யப்பட்டு பி-4 பந்தையச் சாலைக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிதம்பரம்
சிதம்பரம் தெற்கு சன்னதி தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு தோழர் பா.பிரபாகரன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உரையாற்றினார்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி தலைமை தாங்கினார். த.இ.மு. அமைப்பாளர் தோழர் சி.பிரகாசு, தோழர் பஞ்சநிலம்(த.தே.வி.இ.), தமிழக உழவர் முன்னணித் தோழர்கள் அர.கனகசபை, இராமகிருஷ்ணன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் முடித்து வைத்துப் பேசினார்.

மதுரை
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். வைகை – மதுரை மாவட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளர் சங்கப் பொருளாளர் திரு இரா.பாஸ்கரன், எவர் சில்வர் - பாலிஸ்டர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு பரமன், தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொருளாளர் திரு மு.ரெ.மாணிக்கம், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் இளமதி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் தொ.ஆரோக்கியமேரி (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மா.லெ.), தோழர் பா.இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரை நிகழ்த்தினார்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் இராமேசு கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரை நிகழ்த்தினார்.

தஞ்சை நகரம்
தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து எழுச்சியுரையாற்றினார்.

குருங்குளம்
தஞ்சை வட்டம் குருங்குளம் சமத்துவபுரம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் முனியமுத்து தலைமை தாங்கினார். தோழர்கள் வே.தனசேகர், கை.இராசுக்குமார், அ.பொன்னுச்சாமி, பி.சாமிய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்தினர்.

செங்கிப்பட்டி
தஞ்சை வட்டம் செங்கிப்பட்டி - சாணுரப்பட்டி முதன்மைச்சாலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்கினார். தோழர் ஆ.தேவதாசு, ஒன்றியத் தலைவர்(த.இ.மு.), தோழர் கெ.செந்தில்குமார்(ஒன்றியச் செயலாளர், த.இ.மு.), தோழர் கெ.மீனா(மகளிர் ஆயம்), தோழர் ச.காமராசு, தோழர் ஆ.சண்முகம், தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் கோ.இரமேசு, தோழர் கருப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

குடந்தை
குடந்தை காந்தி பூங்கா அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் ச.செழியன் தலைமை தாங்கினார். குடந்தைத் தமிழ்க் கழகச் செயலாளர் தோழர் சா.பேகன், வழக்கறிஞர் ரெ.சிவராசு (மாவட்டச் செயலாளர், த,இ.மு.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்கினார். தோழர் தனபாலன்(த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் பா.அரசு (ஒன்றியச் செயற்குழு), தோழர் சு.இரமேசு (நகரச் செயலாளர், த.தே.பொ.க), தோழர் ரெ.செயபாலன் (மன்னை பகுதி செயலாளர், த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கீரனூர்
கீரனூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். பொறிஞர் அகன்(பாவாணர் மன்றம்), தோழர் பெ.லெட்சுமணன், தோழர் சொ.சதா சிவம், தோழர் இராஜகுமார், தோழர் சா.பிரபு, தோழர் பார்த்திபன், தோழர் பெ.பாரதி, தோழர் இலெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் தேரடித் திடலில் மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் தமிழ்த் தேசியன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, தோழர் துரை அரிமா(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் சு.க.மகாதேவன் (நாம் தமிழர்), தோழர் முத்துராசன் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

திருச்சி
திருச்சி தொடர் வண்டி நிலையம்(காதி கிராப்ட் அருகில்) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். திரு வீ.நா.சோமசுந்தரம், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி, தோழர் வே.பூ.ராமராஜ், தோழர் க.ஆத்மநாதன், தோழர் சத்யா, தோழர் முகில் இனியன், தோழர் வே.க.லட்சுமணன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் இன்றும் இவ்வார்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

தலைமைச் செயலகம், இடம்: சென்னை-17, நாள்: 22.02.2012

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT