உடனடிச்செய்திகள்

Sunday, May 20, 2012

“தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!” - பெ.மணியரசன் பேச்சு!

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பெ.மணியரசன் பேச்சு

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வியே" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது". சிங்கள – இந்தியப் பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை. முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


தஞ்சை
தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நினைவேந்தலுக்கு த.தே.பொ.க. நகர துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். 


நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் "முள்ளிவாய்க்கால் குருதி வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் இனச் சொந்தங்ளுக்கும், விடுதலைப்புலி வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேர்ந்த பின்னடைவும், தோல்வியும் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட தோல்வியாகும். இக்கருத்தை இன உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நான் சொல்லவில்லை. 'ஆயுதமேந்தி முப்படைகள் கொண்டு போராடிய ஈழத்தமிழர்களையே தோற்கடித்துவிட்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மாத்திரம்?' என்ற உணர்வு இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும், நமக்குப் பகைவர்களாகிப் போன அண்டை இனங்களான கன்னடர்கள், மலையாளிகள் போன்றோருக்கும் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, காவிரி உரிமையை மீட்க தஞ்சை மாவட்டத்திலும், சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடும் போராட்டங்கள் நடத்தினோம். அதில், இந்திய அரசின் துணையோடு கன்னடர்கள் நம்மை தோல்வியடையச் செய்தார்கள். அது மட்டுமின்றி, 1991 நவம்பர் - திசம்பர் மாதங்களில் 'காவிரிக் கலவரம்' என்ற பெயரில், கர்நாடகத் தமிழர்களைத் தாக்கி கன்னட வெறியர்கள் தமிழர்கள் பலரைக் கொன்றார்கள். வீடுகளை சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தார்கள். நாம் பதிலடி கொடுக்கவில்லை. அகதி முகாம்கள் தாம் நடத்தினோம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, தமிழர்களை விட மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறித்தார்கள். தமிழர்களைத் தாக்கினார்கள். அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன தமிழர்களையும் தாக்கினார்கள். இந்த துணிச்ச்சல் மலையாளிகளுக்கு எங்கிருந்து வந்தது? காவிரி பிரச்சினையில் நம்மைவிட சிறுபான்மையாக உள்ள கன்னடர்களிடம் நாம் தோற்றதாலும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துணை மலையாளிகளுக்கு இருப்பதாலும் தான் இந்த துணிச்சல் அவர்களுக்கு வந்தது.

எனவே, முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதை உணர்ந்து, சாதியாக பிளவு படாமல் ஒன்றுதிரண்டு வருங்காலத்தில் மூர்க்கமாக உரிமை மீட்கப் போராட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்று நாம் உணர வேண்டும். முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளையில், இந்தப் படிப்பினையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

"தமிழர் சர்வதேசியம் வேண்டும்" – திருத்துறைப்பூண்டி தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு
முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவு கூறும்ட வகையில், திருத்துறைப்பூண்டியில் 18.05.2012 அன்று நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. நிகழ்வுக்கு, கூட்டமைப்பின் செயலாளர் தோழர் எஸ்.அரவிந்தன் தலைமையேற்றார். தோழர் எஸ்.இராமச்சந்திரன்(வங்கி ஊழியர் சங்கம்) வரவேற்புரையாற்றினார்.

நிறைவில், சிறப்புரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "புவிசார் அரசியல் ஆதிக்கத் தேவை மற்றும் இந்திய முதலாளிகளின் சந்தைத் தேவை ஆகிய காரணங்களுக்காகத் தான் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகித்த்தாக சொல்கிறார்கள். ஆனால், இவற்றை விட இந்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான ஆரிய இனவெறிப் பகை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழை பகையாக்க் கருதும் ஆரிய இனத்தின் இன்றைய அரச வடிவம் தான் இந்தியா. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த தந்தை செல்வும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், இந்தியாவை எதிரியாக ஓரிடத்திலும் சொன்னதில்லை. ஆனால், இந்தியாவோ தமிழர்களைத் தான் முதன்மைப் பகையாகக் கருதுகிறது.

1947 வெள்ளையர்கள் ஆட்சி முடிவுக்குப் பிறகு தான் நாம், ஆரிய இந்தியாவில் பலவற்றையும் இழந்திருக்கிறோம். யாரெல்லாம் தமிழர்களுக்கு எதிரியோ இந்தியா அவர்களுக்கு நண்பன். அதனால் தான், தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களத்தோடு நட்பு கொள்கிறது இந்தியா. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தொடர்ந்து தமிழகம் அண்டை தேசிய இனங்களால் வஞ்சிக்கப்படும் போது, அத்தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நட்டிற்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. எனவே, இந்தியா ஆரியத்தின் வடிவம் தான்.

'பாரத்' என்று அழைக்கப்படுவதும், 'பத்மபுஷன்', 'பத்மசிறீ', 'பத்மினி', 'ஆரியபட்டா' என சமற்கிருதப் பெயர்களில் அரசு நடவடிக்கைகள் தொடர்வதும், சிங்கத்தை அரசுச் சின்னமாகக் கொண்டிருப்பதும் இந்தியா ஆரியத்தின் வடிவமாகத் தொடர்வதையே காட்டுகின்றது. ஆரியத்தின் பழமைதான், இந்தியாவின் பழமையாக குறிக்கப் படுகின்றது. அதனால் தான், இன்று ஈழத்தமிழர்களாக இருந்தாலும்,  அவர்களுக்கு உதவதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றாலும் அனைவரையும் இந்தியா எதிரியாக கருதுகின்றது.

பாலத்தீன தேசத்திற்கு எப்படி இஸ்ரேல் உடனடிப்பகையாக விளங்குகிறதோ, அதைப் போலவே ஈழத்தமிழர்களுக்கு சிங்களம் உடனடிப்பகை. அதேபோல், பாலத்தீன தேசத்திற்கு அமெரிக்கா எப்படி சர்வதேசப் பகையோ, அதைப்போல ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தான் சர்வதேசப் பகை. இந்தத் தெளிவோடு ஈழத்தமிழர்கள் தம் அரசியல் முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்கள் துணை நிற்பது போல், தமிழ்நாட்டு உரிமைக்கான போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்களும் ஆதரவளிக்க வேண்டும். தமிழீழ விடுதலை – தமிழ்நாட்டு விடுதலை ஆகிய இரு வேலைத்திட்டங்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்த தமிழர் சர்வதேசியத்தை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.


தமிழிய ஆய்வாளர் முனைர் த.செயராமன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் கே.இராசா, தொ.ச. கூட்டமைப்புத் தலைவர் தோழர் டி.சிங்காரவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன், ஏ.ஐ.டி.யு.சி. நகரப் பொறுப்பாளர் தோழர் எம்.முருகதாஸ், தோழர் டி.தெட்சிணாமூர்த்தி(என்.எப்.டி.இ.), தோழர் வி.கே.செல்வராசு (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), தோழர் என்.குணசேகரன்(த.அ.போ.கழகம் - ஏ.ஐ.டி.யு.சி.) ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தொழிற்சங்க கூட்டமைப்புப் பொருளாளர் தோழர் பி.அன்பழகன் நன்றி நவின்றார்.



சென்னை


சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 19.5.2012 அன்று மாலை 5 மணியளவில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். தோழர் தமிழ்க்கனல் (தாம்பரம் கிளைச் செயலாளர்) முன்னிலை வகித்தார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கருத்துரை வழங்கினார். வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி, த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை


கோவை செட்டிவீதி அசோகன் பகுதியில் நேற்று (17.5.2012) காலை 11 மணியளவில், தமிழ்ச் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் பி.சுரேசு தலைமையேற்றார். த.இ.மு கிளைச் செயலாளர் கு.இராசேசுகுமார். த.தே.பொ.க தோழர்கள் இரா.கண்ணன், ம.தலவாய்சாமி, சு.மாரியப்பன் உள்ளிட்ட திரளான தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான தோழர்களும், உணர்வாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க.  பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி ரவுண்டானா பகுதியில், 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தோழர் குமார்(தமிழர் தேசிய இயக்கம்) தலைமையேற்றார். தோழர் கோபால்(வி.வி.தே.மு.), தோழர் சந்திரன்(ம.தி.மு.க.), தோழர் பெ.ஈ.ஸ்வரன்(த.இ.மு.) ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

 செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி - சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 18.5.2012 அன்று காலை 9 மணியளவில் த.தே.பொ.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர்), தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு உறுப்பினர், த.தே.பொ.க.)  ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதிகிராப்ட் அருகில்) 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில், த.தே.பொ.க. சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவலர் மு.வ.பரணர் தலைமையேற்றார்.  த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் முன்னிலை வகித்தார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன்(த.தே.பொ.க.) நன்றி நவின்றார்.

குடந்தை

குடந்தை மேலக்காவேரி அருகில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற வீரவணக்க தெருமுனைக் கூட்டத்தையொட்டி, த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு த.தே.பொ.க. நகரச்செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.
  
சாமிமலை
சாமிமலை கடை வீதியில் 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில் த.தே.பொ.க. கொடியேற்றப்பட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ம.திருவரசன் (எ)முரளி (த.தே.பொ.க.) நிகழ்வுக்குத் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, தோழர் ச.பேகன் (குடந்தை தமிழ்க் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவில், தோழர்.க.தீந்தமிழன்(எ)தினோசு நன்றி கூறினார்.

மதுரை
மதுரையில் தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், தலைமை அஞ்சல் அலுவலகம் (மீனாட்சி பசார்)முன், 19.05.12 அன்று மாலை  5 மணியளவில் "முள்ளிவாய்க்கால் முடிவல்ல''  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இராசு அறிமுகவுரையாற்றினார். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, த.தே.வி.இ. மாவட்டச் செயலாளர் தோழர் கதிர்நிலவன், மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் திரு. க.பரந்தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வினை, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தோழர் சு.தளபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



தூத்துக்குடி
தூத்துக்குடி க்க்கன் பூங்கா எதிரிலுள்ள மக்கள அரங்கத்தில், 17.05.2012 அன்று மாலை 7 மணயளவில், தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.ஓ.வி.இ. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் தலைமையேற்றார். திரு சவுந்திரபாண்டியனார்(நாம் தமிழர் இயக்கம்) முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராசு, தமிழர் தேசிய இயக்க மாவட்டப் பொறுப்பாளர் தோழர் துரை.அரிமா, தோழர் மகாதேவன்(நாம் தமிழர் கட்சி), வெனி.இளங்குமரன் (உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
      


இடம்:சென்னை

தலைமைச் செயலகம்,
 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT