உடனடிச்செய்திகள்

Monday, March 12, 2012

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம் - த.தே.பொ.க. கண்டனம்!

சி.பி.எம் நடத்தியது இராசபட்சே ஆதரவு ஆர்ப்பாட்டம்!: 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!

இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சென்னையிலுள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் 5. 3.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பைப் பார்த்து தமிழினப் பகைக் கட்சியான சி.பி.எம். திருந்திவிட்டதோ என எண்ணி சிலர் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சி.பி.எம். கட்சி திருந்தவே திருந்தாது என்பதை அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேட்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் நேர்காணலும் தெளிவாக்கிவிட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளரிடம் பேசிய ஜி.இராமகிருஷ்ணன் கூறியது வருமாறு:

" கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் சில பரிந்துரைகளை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளில் சிலவற்றைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. அந்த ஆணையத்தின் அனைத்துப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை இந்தியா வலியுறுத்த வேண்டும்" ( தீக்கதிர் 6.3.2012.)

இராசபட்சே அரசு அமைத்த விசாரணை ஆணையம் போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே செயல்பட்டு ஒருதலைச் சார்பான அறிக்கை அளித்ததை உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் எடுத்துக்காட்டிக் கண்டிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு இலங்கையில் அனைத்து மட்ட நீதி மன்றங்களும் பிற துறைகளும் சிங்கள இனவாதத்தில் மூழ்கிஉள்ளதால் அந்நாட்டுக்குள் நடக்கிற எந்த விசாரணையும் தமிழர்களுக்கு இன வழிப்பட்ட நீதியைப் பெற்றுத்தராது. என பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துரைத்து விட்டது எனவேதான் ஐ.நா பொதுச்செயலாளர் இராசபட்சே குழுவினரின் போர்க்குற்றங்களை விசாரிக்க சார்பற்ற சர்வதேச ஆணையம் ஒன்றை அமைத்து உணமைகளை கண்டறிந்து தொடர்புடையவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பரிந்துரைத்தது அக்குழு.

ஜி.இராமகிருஷ்ணன் கொஞ்சம் பூசி மெழுகிக்கூறுவதை தேங்காய் உடைத்தாற்போல் தெளிவாக டி.கே. ரெங்கராஜன் கூறிவிட்டார். மாலை மலர் நாளேட்டிற்கு 5.3.2102 அன்று டி.கே ரெங்கராஜன்  அளித்த நேர்காணலில் " இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை இலங்கை அரசுதான் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

குற்றவாளியே தன் குற்றங்களை விசாரித்து தனக்கு தண்டணை வழங்கிக்கொள்ள வேண்டும் என்று கூறுகிற விசித்திரவாதம் இது. உண்மையில் இக்கூற்றின் மூலம் இராசபட்சே போர்க்குற்றவாளியல்ல என்று கூறவருகிறது சி.பி.எம். எங்கேயோ, வாச்சாத்திலோ, சிதம்பரத்திலோ, உள்ளூர் காவல்துறையினர் மனித உரிமைக்கு எதிராக குற்றச்செயலில் ஈடு படும்போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பது போல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை வைக்கிறது.

உள்ளூர் அளவில் அரசு அதிகாரிகள் செய்கிற அட்டூழியங்களுக்கு ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் நேரடி பொறுப்பாளியல்லர். எனவே அவர்கள் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கோருவதி பொருளுண்டு. ஆனால் இலங்கையில் அந்நாட்டின் குடியரசுத்தலைவர் இராசபட்சேவே தலைமை தாங்கி படையனுப்பி இன அழிப்பு போர் நடத்தி ஒன்றறை இலட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளார். இதை உலகமே புரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் டி.கே. ரெங்கராஜன் குழுவினருக்கும் மட்டும் இது புரிய வில்லையா?. இல்லை. அவர்கள் புரிந்தே இராசபட்சேவை காப்பாற்ற நாடகமாடு கிறார்கள்.

செய்தியாளர்களின் அடுத்தக் கேள்வி " பன்னாட்டு விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள்?"

அதற்கு, டி.கே ரெங்கராஜன் அளித்த விடை " இலங்கை இறையாண்மையுள்ள நாடு இந்தியாவின் நட்பு நாடு என்பதாகும்"

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசால் கருப்பின மக்கள் இன ஒடுக்குமுறைக்கு ஆளானபோது இதே சி.பி.எம். கட்சி ஐ.நாவின் தலையீட்டை, உலக நாட்டுகளின் தலையீட்டைக் கோரியது. அப்போது அது இறையாண்மையுள்ள தென்னாப்பிரிக்க நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாக சி.பி.எம்.க்கு தெரியவில்லை.

சிலீ நாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணியோடு ஆட்சி அமைத்த ஆலண்டே, அந்நாட்டின் படைத்தளபதியான பினோச்சேயால் படுகொலை செய்யப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதை தொடர்ந்து கம்யூனிஸ்டுகளும் தொழிற்சங்கவாதிகளும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். கேள்வி முறையின்றி சிறைப்படுத்தப்பட்டனர். சிலீயில் நடந்த மனித உரிமை மீறலுக்காக பினோச்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று உலக முழுவதுமிருந்த முற்போக்காளர்கள் கோரினார்கள். சி.பி.எம் கட்சி இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கங்கள் நடத்தியது. அப்போது அது சிலீயில் உள்நாட்டு பிரச்சினையாக சி.பி.எம் முக்கு படவில்லை. சிலீ நாட்டின் இறையாண்மைக்கு எதிராக வெளியார் தலையீடு கூடாதென உபதேசிக்க வில்லை.

ஆனால் தமிழர் என்று வந்துவிட்டால் அப்போதுமட்டும் எங்கிருந்தோ இறையாண்மை வந்து குதிக்கிறது. சி.பி.எம் கட்சி உலக மாந்தர்களுக்கு முன்வைக்கும் மனித உரிமை தமிழர்களுக்கு மட்டும் கிடையாது போலும்.

" தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென்ற மார்க்சியக் கொள்கையை சி.பி.எம். கட்சி கைவிட்டுவிட்டதா?" என்று அடுத்த ஒரு கேள்வியை செய்தியாளர்கள் கேட்டார்கள்.  "அதை வெளியிலிருந்து திணிக்கக் கூடாது" என்றார் டி.கே. ரெங்கராஜன் .

ஈழத் தமிழரின் விருப்பத்தை அறிய இலங்கையில் வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு

"அதனை எதிர்க்கிறோம்" என்றார்.

ஈழத்தமிழர்களின் அரசியல் விழைவை அறிய அம்மக்களிடம் ஐ.நா. கருத்து வாக்கெடுப்பு நடத்துவதை மட்டுமல்ல இலங்கை அரசே நட்த்துவதைக் கூட எதிர்க்கிறது சி.பி.எம் கட்சி.

ஆனால் டி.கே. ரெங்கராஜனின் சி.பி. எம் கட்சி கிழக்கு திமோரில் சுய நிர்ணய உரிமை அடிப்படையில் ஐ.நா மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்திய போது ஓடோடிச் சென்று அதனை ஆதரித்தது. அப்போது வெளியிலிருந்து திணிக்கக் கூடாது என்று கூறவில்லை. இதிலும் உலகத்திற்கு என்றால் ஒரு ஞாயம் தமிழருக்கென்றால் ஒரு ஞாயம்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே சி.பி.எம் கட்சி தமிழினத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

சிங்கள அரசு நடத்திய திட்டமிட்ட இன அழிப்பு போர் குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் மூவர் குழு அளித்த விசாரணை அறிக்கை கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான போது அதை படித்த மனித நேயர்கள் அனைவரும் உலகெங்கும் கொந்தளித்தார்கள். அதை தொடர்ந்து வெளியான சேனல் 4 காட்சிகள் உலகின் மனச்சான்றயே உலுக்கின.

இச்சூழலில் சென்னையில் 30.7.2011 அன்று இலங்கைத் தமிழர் சம உரிமை அரசியல் தீர்வு சிறப்பு மாநாடு என்ற பெயரில் ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் கூட்டம் ஒன்றை  சி.பி.எம். நட்த்தியது. அதில் அக்கட்சி இயற்றிய தீர்மானம் " கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர் " என்று கூறியது( தீக்கதிர் 31.7.2011)

ஒன்றறை இலட்சம் ஈழத்தமிழர்கள் சிங்கள அரசின் இனவெறிப்படை இனப் படுகொலை செய்யப்பட்டனர். அரசுப்படைதான் கூட்டங்கூட்டமாக தமிழர்களை கொன்று குவித்து அவர்களது வாழிடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு இடங்கள், ஆகிய அனைத்தையும் தரைமட்டமாக்கியது. ஐ,.நா. மன்றம் உள்ளிட்டு அனைவருமே ஏற்றுகொண்ட இந்த உணமையை மறைத்து " இரு தரப்பிலும் ஏராளமானோர் கொல்லப்பட்டன  என கதையளந்தது சி.பி.எம் கட்சி.

அம்மாநாட்டின் தீர்மானமும் போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசே உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரியது. அம்மாநாட்டுத் தீர்மானத்திலோ தலைவர்களின் உரையிலோ ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளானதைப்பற்றி ஒரு சொல் கூட இல்லை. ஆனால் இலங்கை அரசுப்படைகளுக்கு, விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதலில் இருதரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டதாக மட்டுமே கூறியது.

இந்த சி.பி. எம். கட்சி தமிழர்களுக்கு அழிவு நேரும் போதுதான்இவ்வாறு பேசுகிறதே தவிர சிங்களனுக்கு ஒரு சிக்கலென்றால் பதறி துடிக்கும் ஆனையிறவு போரின் போது அக்கட்சி வைத்த கோரிக்கையே இதற்குச் சான்று.

சிங்களப் படையிடமிருந்து ஆனையிறவு முகாமை 2000 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக மீட்டனர். பதறித்துடித்தது சி.பி. எம் கட்சி அடுத்து யாழ்ப்பாணத்தை மீட்க விடுதலைப் புலிகள் படையெடுக்கக் கூடாது என்றும் அவ்வாறு விடுதலைப்புலிகள் படையெடுத்தால் அதைத் தடுக்க இந்திய அரசு களமிறங்க வேண்டுமென்றும் அக்கட்சியின் அனைத்திந்தியத் தலைமை அறிக்கை வெளியிட்டது. அக்கட்சியின் தலைக்குழு உறுப்பினரும் அக்கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவருமான உமாநாத் "விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்தால் அதை முறியடிக்கும் வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்களை இலவச மாகவே வழங்க வேண்டும் " என்று பதறித்துடித்து அறிக்கை வெளியிட்டார். அப்போது 16000 சிங்களப்படையினர் யாழில் இருந்தனர். சிங்களப் படையாட்களுக்கு ஆபத் தென்றால் துடிக்கின்ற சி.பி.எம் கட்சி அப்பாவித் தமிழர்கள், ஆயுதம் தறிக்காத குழந்தைகளும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் போது இறை யாண்மை ஞாயம் பேசுகிறது.

இன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இராசபட்சே கும்பலை இன அழிப்பு போர்க் குற்றம் குறித்து தீர்மானம் வரும் சூழலில் தமிழர்களிடையே எழுந்து வரும் இன உணர்ச்சி ஞாயப்போராட்டம் ஆகியவை சி.பி.எம் தலைமையை அதிர வைக்கிறது. தமிழர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோமோ அக்கட்சித் தலைமை அஞ்சுகிறது. அதே நேரத்தில் அக்கட்சி தமிழினப் பகைபோக்கையும், சிங்களப் பாசத்தையும் விட விரும்பவில்லை. அதற்கேற்ப தந்திரமாக நடித்து நயவஞ்சகம் செய்கிறது சி.பி.எம். தலைமை.

தனது கட்சிக்குள் கொஞ்சநஞ்சம் இருக்கிற இன உணர்வாளர்களையும், சனநாயக உணர்வாளர்களையும் திசை திருப்பும் உத்தியாகவே இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆனால் அதன் தமிழின பகைப் போக்கை அதனால் மறைக்க முடியவில்லை. டி.கே. ரெங்கராஜனின் நேர்காணல் அதனை அம்பலப்படுத்தி விட்டது.

உலகத்திற்கு சர்வதேசிய ஞாயம் பேசும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நயவஞ்சக தமிழினப்பகைப்போக்கை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் இவர்கள் கட்சியினரும் உறுப்பு வகிக்கும் தமிழ்நாடு சட்ட மன்றமும் இராசபட்சே குழுவினருக்கு எதிராக பன்னாட்டு விசாரணை வேண்டுமென்று ஒருமித்தக் குரலில் வலியுறுத்தும் போது சி.பி.எம் கட்சியின் இத்திசை திருப்பல் ஆர்ப்பாட்டம் இனக்கொலையாளி இராசபட்சேயை பாதுகாக்கிற முயற்சியாகும்.

சி.பி.எம் கட்சியை தமிழினம் மன்னிக்காது. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக உழைக்கும் மக்கள் தமிழினப்பகை கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்டு கட்சியை புறக்கணிக்க வேண்டும்.

நன்றி: பதிவு இணையம்

Saturday, March 10, 2012

"அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" - பெ.மணியரசன் அவர்களது உரை ஒளிப்படங்களுடன்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் குவைத்தில் நடைபெற்ற, "அய்நா மனிதவுரிமைக் கூட்டமும் அமெரிக்கத் தீர்மானமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது தொலைபேசி வழி உரை ஒளிப்படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவேற்றம்: மார்ச் - 9 - 2012

Friday, March 2, 2012

இராசபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மார்ச் 6 உண்ணாப்போரில் த.தே.பொ.க. பங்கேற்பு!

இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவி எனக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!

 

ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி வருகிற 06.03.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், மாவட்டத் தலை நகரங்களிலும் உண்ணாப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டு அனைத்து அமைப்பினரையும் அக்கட்சி அழைத்துள்ளது.

 

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று, மார்ச் 6 அன்று நடக்கும் உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதாக முடிவு செய்துள்ளது.

 

ஏற்கெனவே, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபக்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்களையும் படைத் தளபதிகளையும் நிறுத்தி விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு தமிழின அமைப்புகளும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன.

 

வடகிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவம் முற்றிலும் அகற்ற வேண்டும், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காக வடகிழக்கிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசியல் கைதிகளாக இலங்கைத் தீவில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணம் அளித்து விடுதலை செய்ய வேண்டும், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளை தமிழர்களின் தாயகப் பகுதி எனவும், அங்கு தமிழர்களுக்குத் தனிஅரசு உரிமை உண்டெனவும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துகிற அதே நேரத்தில், இந்த உண்ணாப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் கலந்து கொள்ளும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


Wednesday, February 29, 2012

ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா.வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி - கி.வெங்கட்ராமன்!

ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஐ.நா வில் வல்லரசுகளின் சதிக்கூட்டணி

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

 

ஈழத்தமிழர் இனச்சிக்கல் குறித்து ஐ.நா.மன்றத்திலிருந்து கசிந்து வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உலக வல்லரசுகளின் சதி வலைக்குள் தமிழீழச் சிக்கலை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சிகள் நடக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகம் முழுவதும் பரவி வாழும் புலம்பெயர்த் தமிழர்களும் இனப்படுகொலை குற்றவாளி, போர்க்குற்றவாளி, மனிதக் குலப் பகைவன் இராசபட்சே குழுவினர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என ஒற்றைக்குரலில் ஐ.நா. மன்றத்தைக் கோருகின்றனர்.

 

ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர் குழு பரிந்துரைத்தவாறு சிங்கள இனவாத இலங்கை ஆட்சியாளர்களை மேற்கண்ட குற்றங்களுக்காக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழீழ தாயகப்பகுதியிலிருந்து இலங்கைப் படைகள் திரும்பப் பெறப்பட்டு அங்கு இயல்பு நிலையைக் கொணரவேண்டும், தமிழீழத் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழக்கூடிய ஈழத்தமிழர்களிடம் அவர்களது அரசியல் விழைவை அறிய கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கைச் சிறைகளிலுள்ள விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழீழ அரசியல் சிறையாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை ஐ.நா. மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்து உலகம் முழுவதும் பல லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர்.

 

உறைபனிக்கிடையில் வேலுப்பிள்ளை மகேந்திரராசா, லோகநாதன் மருதையா, ஜாக்கோமுத்து கிரேசியன் ஆகிய மூன்று வீரத்தமிழர்கள் ஐரோப்பக் கண்டத்தின் ஊடாக நடைப்பயணம் மேற்கொண்டு இக்கோரிக் கைகளுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை மன்ற முன்றிலில் பல இலட்சம் தமிழர்கள் கூடி உலகநாட்டு பேராளர்கள் முன்பு இக்கோரிக்கைகளை முழங்கி விண்ணப்ப மனுக்களை அளிக்க இருக்கிறார்கள்.

 

உலகத் தமிழர்களின் இந்த அடிப்படை மனித உரிமை வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு சிங்கள இனவாத இலங்கை அரசே தனது ஆட்சியாளர்களும் படைத் தளபதிகளும், உலகச் சட்டங்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களை விசாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளட்டும் என்ற சொத்தைத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சதி செய்து வருவதாக கசிந்து வரும் செய்திகளிலிருந்து தெரிகிறது.

 

பெற்ற படிப்பினைகள்  மற்றும் இணக்கத்திற்கான ஆணையம் (LLRC) என்ற பெயரில் இலங்கை அரசு நியமித்த விசாரணைக்குழு அறிக்கையின் மீது குறிப்பிட்ட காலவரம்புக்குள் நடவடிக்கை எடுத்து தொடர்புடையவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்வதாக "அத்தீர்மானம்" கூறுகிறது. குற்றவாளியே தன்னை விசாரித்து ஒரு கால வரம்புக்குள் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோருகிற கொடிய தீர்மானம் இது.

 

ஐ.நா. பொதுச்செயலாளரின் வல்லுநர் குழு அளித்த ஆய்வறிக்கை இலங்கையின் நீதித்துறை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சிங்கள இனவாதத்தில் தோய்ந்திருப்பதையும் தமிழினத்திற்கெதிரான போர் வெறி ஊட்டப்பட்டிருப்பதையும் சான்றுகளுடன் எடுத்துக் காட்டியது. இலங்கைக்குள் நடக்கிற எந்த வகை விசாரணையிலும் தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்காது என்பதை எடுத்துக்காட்டியது. இதனால்தான் பன்னாட்டு நீதிமன்றத்தில் இராசபட்சேயும் படை அதிகாரிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா பொதுச்செயலாளர் இதற்கென்று சிறப்பு ஆணையம் அமைத்து நடந்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.

 

கசிந்து வரும் செய்திகள் உண்மையாய் இருக்குமானால் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் இப்போதைய 19 ஆவது அமர்வின் இத்தீர்மானம் ஐ.நா. வல்லுநர் குழுவின் பரிந்துரையையே துச்சமென தூக்கியெறியும் செயலாகும். இலங்கை அரசும் அதற்குத் துணையாக இந்திய அரசும் வலியுறுத்தும் அநீதிக்கு அமெரிக்காவும் பிற ஐரோப்பிய நாடுகளும் துணைபோவதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைப் போரில் சிங்கள அரசோடு இந்தியாவும் சீனவும் இணைந்து நடத்திய இன அழிப்பு குறித்து வல்லரசுகளுக்கு கவலை இல்லை.

 

தமிழின அழிப்புப் போரின் ஊடாக இலங்கைத் தீவில் சீனாவின் கைமேலோங்குவதை மட்டுபடுத்தும் அளவுக்கு இலங்கையை மிரட்டிவைத்தால் அமெரிக்க ஐரோப்பிய வல்லுரசுகளுக்கு போதுமானது. இந்திய  ஏகாதிபத்தியத்திற்கும் அது ஏற்புடையதே. இலட்சக்கணக்கில் மாண்டு போன ஈழத்தமிழர்களின் பிணங்களின் மீது இந்த வல்லரசு காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. மற்றபடி இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கவேண்டும்,  உலகச்சட்டங்களுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர்கள் மீது ஐ.நா. சட்டங்களின் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்பதெல்லாம் உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

 

ஐ.நா. சட்டங்களின் வரையறுப்புப் படியே ஈழத்தமிழர்கள் சிங்களர்களிடமிருந்து வேறுபட்ட தனி தேசிய இனம் என்பதோ, ஈழத்தமிழர்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள். என்பதோ எனவே உலகச் சட்டங்களின் படி ஈழத்தமிழர்கள் தனித்தேசிய அரசு நிறுவிக்கொள்ள உரிமைப்படைத்தவர்கள் என்பதோ உலக வல்லரசுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.

 

தங்களது ஆதிக்க நலன்களுக்கு ஏற்ற காய்நகர்த்தல்களில் ஒன்றாகவே ஏதோ சில வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு ஆதரவாக வல்லரசுகள் குரல் கொடுக்கின்றன.

 

ஆயினும் 2009 ஆம் ஆண்டு இதே இலங்கை அரசை பயங்காரவாதத்தை முறியடித்த நாடு என பாராட்டிய மேற்குலக நாடுகள் நடந்துள்ள குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று இலேசாக முணுமுணுக்கின்றன என்பது மட்டுமே வேறுபாடு. ஈழத்தமிழர்களின் இடைவிடாத போராட்டங்களினால்தான் இந்த சிறிய மாற்றமும் நடைபெற்றுள்ளது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தமிழினத்திற்கெதிராக வல்லரசுகள் மேற்கொள்ளும் சதிச் செயல்களைக் கண்டு தமிழர்கள் தங்கள் கோரிக்கைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த வல்லுநர்குழு பரிந்துரைத்தபடி இராசபட்சேக் கும்பலை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கைகளை தொடர்ந்து, விடாமல் வலியுறுத்துவோம். உலக மனசாட்சியின் கதவுகளை அது திறக்குவரை தமிழர்கள் நாங்கள் தட்டுவோம்.

 

உலக நாடுகள் எங்கும் இயங்கும் மனித உரிமை அமைப்புகளும் சனநாயக இயக்கங்களும் தமிழினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இக்கொடிய அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம். இத்திசையில் தெளிவோடும் உறுதியோடும் உலகத் தமிழர்கள் தங்கள் முயற்சியை தொடரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

 

தோழமையுடன்>

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்சென்னை-17


Friday, February 24, 2012

ஐ.நா. மன்றம் நோக்கிய நீதிக்கான நடைபயணம் - பெ.மணியரசன் செவ்வி!

ஈழத்தமிழர் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்டுள்ள தோழர்களை வாழ்த்தி
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் அளித்துள்ள நேர்காணல்!


நன்றி: பதிவு இணையதளம்

Thursday, February 23, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழக அரசே கேட்டுப் பெறு! - தஞ்சையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

நெய்வேலி மின்சாரத்தை தமிழக அரசே கேட்டுப் பெறு! 
தஞ்சையில் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!




தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு 21.02.2012 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து எழுச்சியுரையாற்றினார்.

Wednesday, February 22, 2012

“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவுக்கு இல்லை” - பெ.மணியரசன் பேச்சு!






“நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் செயலலிதாவுக்கு இல்லை”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

“தமிழக மின்வெட்டைப் போக்க நெய்வேலி மின்சாரத்தை கேட்கும் துணிச்சல் முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லை” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கூறினார்.

தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நேற்று(21.02.2012) தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது.

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் இவ்வாறு தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் கூட தமிழக முதலமைச்சர் செயலலிதா மின்வெட்டை குறைப்பதற்கு பதிலாக அன்றாடம் அதிகப்படுத்திக் கொண்டே வந்துள்ளார். சென்னை தவிர்த்த மற்ற தமிழகமெங்கும் கிட்டத்தட்ட 12 மணிநேரம் மின்வெட்டு இருக்கிறது. செயலலிதாவின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகத்திற்கும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் கேரளாவிற்கும், பாலாற்றைத் தடுக்கும் ஆந்திராவிற்கும் போய்க் கொண்டிருக்கிறது. அதை தமிழ்நாட்டிகே முழுவதுமாக இந்திய அரசு தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைப்பதற்கான துணிச்சல் முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லை.

இன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகம் தழுவிய அளவில் நடத்துகின்ற இவ்வார்ப்பாட்டங்கள் நெய்வேலி மின்சாரம் தமிழகத்திற்கே என்ற கோரிக்கையை வெளிப்படுத்தும் ஓர் அறிமுகப் போராட்டம் தான். தமிழக மக்கள் புதிய வடிவங்களில் இதே கோரிக்கைக்காக போராடி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும். பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தங்குதடையற்ற மின்சாரத்தை நிறுத்த வேண்டும். தமிழக மின்வெட்டை நீக்க உடனடி வாய்ப்பு இவை தான்” என்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வேலுமணி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பொறியாளர் சி.பா.அருட்கண்ணனார், முன்னாள் மின்வாரிய செயற்பொறியாளர் தோழர் பொன். ஏழுமலை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோவை
கோவை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அருகில் த.தே.பொ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும், மாலை 5.30 மணிக்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய த.தே.பொ.க. தோழர்களை காவல்துறை கைது செய்தது. த.தே.பொ.க. தோழர் மா.தளவாய் சாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன், த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர், கிளைச் செயலாளர்கள் தோழர் கு.இராசேசுக்குமார், தோழர் பிறை.சுரேஷ், த.இ.மு. அமைப்பாளர் தோழர் வெங்கடேசு உள்ளிட்ட 10 தோழர்கள் கைது செய்யப்பட்டு பி-4 பந்தையச் சாலைக் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

சிதம்பரம்
சிதம்பரம் தெற்கு சன்னதி தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு தோழர் பா.பிரபாகரன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உரையாற்றினார்.

பெண்ணாடம்
பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி தலைமை தாங்கினார். த.இ.மு. அமைப்பாளர் தோழர் சி.பிரகாசு, தோழர் பஞ்சநிலம்(த.தே.வி.இ.), தமிழக உழவர் முன்னணித் தோழர்கள் அர.கனகசபை, இராமகிருஷ்ணன், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் முடித்து வைத்துப் பேசினார்.

மதுரை
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். வைகை – மதுரை மாவட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளர் சங்கப் பொருளாளர் திரு இரா.பாஸ்கரன், எவர் சில்வர் - பாலிஸ்டர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு பரமன், தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொருளாளர் திரு மு.ரெ.மாணிக்கம், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் இளமதி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் தொ.ஆரோக்கியமேரி (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மா.லெ.), தோழர் பா.இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரை நிகழ்த்தினார்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் மாலை 5 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் இராமேசு கண்டன உரையாற்றினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து உரை நிகழ்த்தினார்.

தஞ்சை நகரம்
தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிநாதன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து எழுச்சியுரையாற்றினார்.

குருங்குளம்
தஞ்சை வட்டம் குருங்குளம் சமத்துவபுரம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் முனியமுத்து தலைமை தாங்கினார். தோழர்கள் வே.தனசேகர், கை.இராசுக்குமார், அ.பொன்னுச்சாமி, பி.சாமிய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து உரை நிகழ்த்தினர்.

செங்கிப்பட்டி
தஞ்சை வட்டம் செங்கிப்பட்டி - சாணுரப்பட்டி முதன்மைச்சாலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்கினார். தோழர் ஆ.தேவதாசு, ஒன்றியத் தலைவர்(த.இ.மு.), தோழர் கெ.செந்தில்குமார்(ஒன்றியச் செயலாளர், த.இ.மு.), தோழர் கெ.மீனா(மகளிர் ஆயம்), தோழர் ச.காமராசு, தோழர் ஆ.சண்முகம், தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் கோ.இரமேசு, தோழர் கருப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

குடந்தை
குடந்தை காந்தி பூங்கா அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் ச.செழியன் தலைமை தாங்கினார். குடந்தைத் தமிழ்க் கழகச் செயலாளர் தோழர் சா.பேகன், வழக்கறிஞர் ரெ.சிவராசு (மாவட்டச் செயலாளர், த,இ.மு.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றினார்.

திருத்துறைப்பூண்டி
திருத்துறைபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்கினார். தோழர் தனபாலன்(த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் பா.அரசு (ஒன்றியச் செயற்குழு), தோழர் சு.இரமேசு (நகரச் செயலாளர், த.தே.பொ.க), தோழர் ரெ.செயபாலன் (மன்னை பகுதி செயலாளர், த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கீரனூர்
கீரனூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். பொறிஞர் அகன்(பாவாணர் மன்றம்), தோழர் பெ.லெட்சுமணன், தோழர் சொ.சதா சிவம், தோழர் இராஜகுமார், தோழர் சா.பிரபு, தோழர் பார்த்திபன், தோழர் பெ.பாரதி, தோழர் இலெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் தேரடித் திடலில் மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் தமிழ்த் தேசியன் தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, தோழர் துரை அரிமா(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் சு.க.மகாதேவன் (நாம் தமிழர்), தோழர் முத்துராசன் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

திருச்சி
திருச்சி தொடர் வண்டி நிலையம்(காதி கிராப்ட் அருகில்) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். திரு வீ.நா.சோமசுந்தரம், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி, தோழர் வே.பூ.ராமராஜ், தோழர் க.ஆத்மநாதன், தோழர் சத்யா, தோழர் முகில் இனியன், தோழர் வே.க.லட்சுமணன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் இன்றும் இவ்வார்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

தலைமைச் செயலகம், இடம்: சென்னை-17, நாள்: 22.02.2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி த.தே.பொ.க கண்டன ஆர்ப்பாட்டம். செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்!

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமெனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் காணொளி வடிவம்! பதிவேற்றம்: பிப்ரவரி 21, 2012

Tuesday, February 21, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு! - இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்!

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு!

இன்று த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம் நடத்தும் இடங்கள்!


தமிழக அரசு செயல்படுத்தும் மின்சார மறுப்பைக் கண்டித்தும்நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குப் பெற வலியுறுத்தியும் இன்று(21.02.2012) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

 

தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் இரத்து செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மின்சாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி நாளை(21.02.2012) தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கிறது. 

 

சென்னை

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நாளை(21.02.2012) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். த.தே.பொ.க. தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் தலைமை தாங்குகிறார். தமிழர் எழுச்சிய இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் எழிலன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் சதீசுகுமார், தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

சிதம்பரம்

சிதம்பரம் தெற்கு சன்னதி தெருவில் நாளை மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். ,தமிழக இளைஞர் முண்னணி மையக்குழு தோழர் பா. பிரபாகரன் தலைமை தாஙகுகிறார். த.தே.பொ.க. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். 

 

மதுரை

மதுரை பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் தலைமை தாங்குகிறார். வைகை – மதுரை மாவட்ட பித்தளைப் பாத்திர தொழிலாளர் சங்கப் பொருளாளர் திரு இரா.பாஸ்கரன், மதுரை மாவட்ட பித்தளை பட்டறை உரிமையாளர் சங்கத் தலைவர் திரு சு.பாலகிருஷ்ணன், சில்வர் பட்டறை உரிமையாளர் சங்கச் செயலாளர் திரு மு. இராமு, தமிழ்நாடு தையல் தொழிலாளர் சங்கம் திரு க.அரசு, எவர் சில்வர் - பாலிஸ்டர் பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு இரா.பொருமாள், தமிழர் தேசிய இயக்கம் மாநிலப் பொருளாளர் திரு மு.ரெ.மாணிக்கம், மகளிர் ஆயம் அமைப்பாளர் தோழர் இளமதி, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், தோழர் கதிர்நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் தொ.ஆரோக்கியமேரி (இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, மா.லெ.), தோழர் பா.இராசேந்திரன் (சித்திரை வீதி தானி ஓட்டுநர் நலச் சங்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு நிறைவுரை நிகழ்த்துகிறார். 

 

ஓசூர்

ஓசூர் இராம் நகரில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து கண்டன உரை நிகழ்த்துகிறார்.

 

கோவை 

கோவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அருகில் மாலை 5.மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் மா.தளவாய் சாமி தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன், ம.தி.மு.க. தலைமைச் செயற்குழு  உறுப்பினர் தோழர் மு.கிருட்டிணசாமி, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

தஞ்சை நகரம்

தஞ்சை தொடர் வண்டி நிலையம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் தெ.காசிகாநாதன், நகர துணைச் செயலாளர் தோழர் இரா. தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் க.காமராசு, தோழர் லெ.இராமசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

குருங்குளம்

குருங்குளத்தில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் முனியமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி மற்றும் தோழர் தனசேகர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

செங்கிப்பட்டி

தஞ்சை வட்டம் செங்கிப்பட்டியில் சாணுரப்பட்டி முதன்மைச்சாலை அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்குகிறார்.  தோழர் ஆ.தேவதாசு, ஒன்றியத் தலைவர்(த.இ.மு.), தோழர் கெ.செந்தில்குமார்(ஒன்றியச் செயலாளர், த.இ.மு.), தோழர் கெ.மீனா(மகளிர் ஆயம்), தோழர் ச.காமராசு, தோழர் ஆ.சண்முகம், தோழர் கு.சுப்பிரமணியன், தோழர் கோ.இரமேசு, தோழர் கருப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

குடந்தை

குடந்தை காந்தி பூங்கா அருகில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தோழர் ச.செழியன் தலைமை தாங்குகிறார். குடந்தைத் தமிழ்க் கழகச் செயலாளர் தோழர் சா.பேகன், வழக்கறிஞர் ரெ.சிவராசு (மாவட்டச் செயலாளர், த,இ.மு.) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். 

 

பெண்ணாடம்

பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கு.மாசிலாமணி தலைமை தாங்குகிறார். தோழர் க.முருகன் (த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்), தோழர் க. வள்ளுவன் (பொறுப்பாசிரியர், அக்னி சத்திரியன்), தோழர் தே.ச.பஞ்சநாதன் (மனித நேயப் பேரவை), தோழர் மா.தமிழ்மாறன் (திருவள்ளுவர் மன்றம்), தோழர் மு.இராமகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் அரிகிருஷ்ணன் (த.தே.பொ.க), தோழர் சி.பிரகாசு (த.இ.மு), தோழர் அர.கனகசபை (த.தே.பொ.க), தோழர் இன்பத் தமிழன் (திருவள்ளுவர் தமிழ் மன்றம்), தோழர் பெரியார் செல்வம் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். தோழர் தனபாலன்(த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் பா.அரசு (ஒன்றியச் செயற்குழு), தோழர் சு.இரமேசு (நகரச் செயலாளர், த.தே.பொ.க), தோழர் ரெ.செயபாலன் (மன்னை பகுதி செயலாளர், த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

கீரனூர்

கீரனூர் கடைவீதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் சி ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். பொறிஞர் அகன்(பாவாணர் மன்றம்), தோழர் பெ.லெட்சுமணன், தோழர் சொ.சதா சிவம், தோழர் இராஜகுமார், தோழர் சா.பிரபு, தோழர் பார்த்திபன், தோழர் பெ.பாரதி, தோழர் இலெ.திருப்பதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் சிறப்புரையாற்றுகிறார். 

 

திருச்செந்தூர்

திருச்செந்தூர் தேரடித் திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் தமிழ்த் தேசியன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி, தோழர் துரை அரிமா(தமிழர் தேசிய இயக்கம்), தோழர் சு.க.மகாதேவன் (நாம் தமிழர்), தோழர் முத்துராசன் (த.தே.பொ.க) ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர்.

 

திருச்சி

திருச்சி தொடர் வண்டி நிலையம்(காதி கிராப்ட் அருகில்) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் கவித்துவன் தலைமை தாங்குகிறார். திரு வீ.நா.சோமசுந்தரம், மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் த.பானுமதி, தோழர் வே.பூ.ராமராஜ், தோழர் க.ஆத்மநாதன், தோழர் சத்யா, தோழர் முகில் இனியன், தோழர் வே.க.லட்சுமணன், தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். 

 

தமிழக மக்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இன்று (21.2.2012) செவ்வாய்க்கிழமை நடத்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். 


Friday, February 17, 2012

இந்திய அரசே! கூடங்குளம் மக்களை கொச்சைப்படுத்தும் ரசியத் தூதர் கடாக்கினை வெளியேற்று -பெ.மணியரசன்!

இந்திய அரசே கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தைக் கூலிப் போராட்டம் என்று கொச்சைப்படுத்திய ரசியத்தூதர் கடாக்கினை வெளியேற்று!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை!

 

ரசிய நாட்டின் இந்தியத் தூதர் அலெக்சாண்டர் எம்.கடாக்கின், கூடங்குளம் அணு உலை தொடர்பாக கடந்த 14.2.2012 அன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறிய செய்திகள், ஒரு வெளிநாட்டுத் தூதுவர் என்ற வரம்பை மீறி, உள்நாட்டு அரசியல்வாதியின் பேச்சைப்போல் இருக்கின்றன.

 

கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடுபவர்கள் தன்னல சக்திகளிடமிருந்து கூலி வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்கிறார்(தி இந்து, 15.2.2012).

 

உள்நாட்டு மக்கள், சனநாயக உரிமைப்படி நடத்தும் போராட்டத்தைக் கூலி வாங்கிக் கொண்டு நடத்தும் போராட்டம் என்று கொச்சைப்படுத்திய ரசியத்தூதரை இதுவரை இந்திய அரசு கண்டிக்க வில்லை.

 

வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரின் இவ்வாறான தலையீடு இன்றைக்குத் தனக்குச் சாதகமானது என்று கருதி, அதைக் கண்டிக்கத் தவிறினால் இது ஒரு கெட்ட முன்னுதாரணமாக மாறிவிடும். வேறொரு நாட்டுத் தூதுவர், எதிர்காலத்தில், இந்தியாவுக்குள் இருந்து கொண்டே மற்றொரு சனநாயக நடவடிக்கையைக் கண்டிப்பார். ஏன், தனக்கு எதிராக உள்ள இந்திய அரசின் முடிவொன்றையும் அவர் கொச்சைப்படுத்தலாம்.

 

ரசியத் தூதர் கடாக்கின் அத்துடன் நிற்காமல், "தமிழக அரசு, தனது மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்க நடுவணரசிடம் கோரிக்கை வைக்கிறது. அதனால் பலன் கிடைக்காது. தமிழக அரசு மின் வெட்டை நீக்கிக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி கூடங்குளத்திலிருந்து மின்சாரம் பெறுவது தான்" என்கிறார்.

 

தமிழக மின்பற்றாக் குறையை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று அறிவுரை வழங்குமாறு ரசியத் தூதரைத் தமிழக அரசு கேட்டதா? தமிழக அரசுக்கும் நடுவணரசுக்கும் மின்சாரம் தொடர்பாக உள்ள சிக்கலில் அத்து மீறித் தலையிட்டு அறிவுரை வழங்கும் அளவுக்கு ரசியத் தூதருக்கு ஆணவம் எங்கிருந்து வந்தது? இந்தியத் அரசு கொடுக்கும் துணிச்சல்தான் அது.

 

தமிழக முதல்வர் செயலலிதா நடுவண் அரசு தனது தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் விலைக்குத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆபத்துக் காலத்தில் அவ்வாறு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது.  தமிழக நெய்வேலி மின்சாரம் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்குச் செல்கிறது. ஆபத்துக்கால ஏற்பாடாக நெய்வேலி மின்சாரம் முழுவதையும் இந்திய அரசு தமிழ்நாட்டிற்களித்தால், தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது. 

 

இவ்வாறு இந்திய அரசின் துணையோடு, தமிழக மின்சாரப் பற்றாக்குறையை ஈடுசெய்யப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி எதுவும் தெரியாத வெளிநாட்டுத் தூதுவரான கடாக்கின் தமிழக மின் பற்றாக் குறையை நீக்கக் கூடங்குளம் மின்சாரம் மட்டுமே, ஒரே வழி என்று தவறாகக் கூறுகிறார். அவர் ரசிய நாட்டின் வணிக முகவராகச் செயல்படுகிறாரே தவிர, அரசுத் தூதுவருக்குரிய கண்ணியம் அவரிடம் இல்லை.

 

ரசியத்தூதரின் அத்து மீறிய தலையீட்டைத் தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும். இந்திய அரசு ரசியாவிடம் கடாக்கினைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, புதிய தூதரைப் பெற வேண்டும் என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை,

நாள் : 17.02.2012 



Thursday, February 16, 2012

நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்கு! - த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!


தமிழக அரசு செயல்படுத்தும் மின்சார மறுப்பைக் கண்டித்தும்
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குப் பெற வலியுறுத்தியும் 21.02.2012 அன்று
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்


2011 மே மாதம் பொறுப்பேற்ற அ.இ.அ.தி.மு.க ஆட்சி 9 மாதங்களாக மின்வெட்டைக் குறைப்பதற்கு மாறாக அதிகப்படுத்திவிட்ட்து. சென்னையைத் தவிர்த்து, தமிழகமெங்கும் 12 மணி நேரம் மின்வெட்டு செயல்படுத்தப்படுகிறது.

மின்சாரத்தை நிறுத்தும் நேரம் குறித்து ஒழுங்கோ வரைமுறையோ கிடையாது. ஒரு நாளைக்கு ஆறுமுறைக்கு மேல் நிறுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட பேரவலமும் பேரழிவும் நடக்கும் போது கூட நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு தமிழக முதல்வர் இந்திய அரசை வலியுறுத்த வில்லை. மத்தியத் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் தருமாறு பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கிறார்.

காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், முல்லைப்பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் கேரளத்திற்கு 9கோடி யூனிட்டும், பாலாற்றைத் தடுக்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் நெய்வேலி மின்சாரம் அன்றாடம் போகிறது. இந்த 26 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்தால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது.

மிக மோசமான தமிழக மின்வெட்டை நீக்கத் தமிழ்த்தேசப்பொதுவுடைமைக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது. தமிழக அரசு, இந்திய அரசை வலியுறுத்தி நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்குப் பெற வேண்டும். வெளிநாட்டு மற்றும் வடநாட்டுப் பெரு நிறுவனங்களுக்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்குவதை மாற்றி, அவற்றிற்கும் மின்வெட்டை செயல்படுத்தி, அவற்றில் மிச்சமாகும் மின்சாரத்தைத் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும்.

இந்திய அரசு, வழக்கம் போல் இதிலும் தமிழகத்தை வஞ்சிக்கிறது. எனவே, இந்திய அரசு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும்.

தமிழக மக்கள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 21.2.2012 செவ்வாய்க்கிழமை அன்று நடத்தும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்

இடம் சென்னை
நாள் 16.02.2012


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT