உடனடிச்செய்திகள்

Tuesday, July 19, 2016

அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையை மீட்டுத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சருக்கு தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை!


அரித்துவாரில் அவமானப்பட்டுக் கிடக்கும்
திருவள்ளுவர் சிலையை மீட்டுத்
தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை! 


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பா.ச.க. மாநிலங்களவை உறுப்பினர் தருண் விசய், தமிழினத்தின் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை, உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் நிறுவுவதற்கு 29.06.2016 அன்று விழா ஏற்பாடு செய்த நிலையில், அங்குள்ள வடநாட்டவர்கள் திருவள்ளுவர் சிலையை இங்கு நிறுவக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

அதன்பிறகு, அரித்துவாரில் உள்ள உ.பி. மாநிலத்திற்குச் சொந்தமான பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அச்சிலை நிறுவப்பட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால், இன்று (18.07.2016) ஆங்கில இந்து ஏட்டில் வந்த படமும் செய்தியும் மேற்படி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை கருப்பு நெகிழித் தாள்களால் (பிளாஸ்டிக்) சுற்றப்பட்டு, கயிறுகளால் கட்டப்பட்டு மேற்படி வளாகத்தில் ஒரு மூலையின் கிடத்தி வைக்கப்பட்டுள்ள உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அப்படத்தைப் பார்த்த தமிழர்கள் தங்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போன்ற துயரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் 30.06.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், வடநாட்டில் திருவள்ளுவர் சிலை இழிவுபடுத்தப்பட்டுள்ளது – இது தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மட்டுமல்ல, அவமானமும் ஆகும், எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு அச்சிலையை மீட்டு தமிழ்நாட்டில் நிறுவி பேராசான் திருவள்ளுவருக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பொழுதாவது திருவள்ளுவப் பெருந்தகைக்கு இழைக்கப்பட்டுள்ள அவமானத்தைத் துடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தச் சிலையை மீட்டு, உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து தக்க இடத்தில் நிறுவ வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியத்தேசியம் என்றும் தமிழர்களும் பாரத மாதா புத்திரர்கள் – புத்திரிகள் என்றும் பம்மாத்து செய்து கொண்டிருக்கும் ஆரியப் பார்ப்பனிய ஆற்றல்களும் அவர்களுக்கு அடிவருடிப் பிழைப்பு நடத்தும் இனத்துரோகிகளும் இந்தியாவில் தமிழர்களும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்று கூறும் பொய்யைப் புரிந்து கொண்டு தங்கள் உரிமைகளைக் காக்க – தங்கள் தன்மானத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் முகமூடி அணிந்து கொண்டு, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. ஆகிய ஆரியப் பார்ப்பனிய அமைப்புகளை வேரூன்றச் செய்து வளர்த்திட செய்யும் தந்திரங்களை அடையாளங் கண்டு முறியடிக்க உறுதியேற்க வேண்டுமென்ற தமிழ் மக்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT