உடனடிச்செய்திகள்

Sunday, July 31, 2016

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லையில் மக்கள் பெருந்திரள் உண்ணாப்போர்!


மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நெல்லையில் மக்கள் பெருந்திரள் உண்ணாப்போர்!
ஆரிய மேலாண்மையும் உலகமய வேட்டையும் இணைந்த ஓர் மக்கள் பகை கல்விக் கொள்கை ”புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரால் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரிய இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நேரடி வழிகாட்டுதலில் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இக்கொள்கையை உருவாக்கி வருகிறது.

தீய நோக்கங்களுடன் கொண்டு வரப்படும் இப்புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, நெல்லையில், இன்று அனைத்து சமுதாயக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பங்கேற்ற மக்கள் பெருந்திரள் உண்ணாப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
நெல்லை – பாளையங்கோட்டை சவகர் திடலில், இன்று (30.07.2016) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற இவ் உண்ணாப் போராட்டத்தை, “சமத்துவக் கல்விக்கானக் கூட்டமைப்பு” ஒருங்கிணைத்தது. இதில், பாளை கத்தோலிக்க மறைமாவட்ட மற்றும் துறவற சபைகளின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், திருமண்டல தென்னிந்தியத் திருச்சபையின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், இரட்சணைய சேனை, அனைத்து இசுலாமிய சமாத்துகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள், சமூக – அரசியல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், அதன் தலைவர்களும் பங்கேற்றனர்.

போராட்டத்தை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. பிரிட்டோ ஒருங்கிணைத்தார். தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. கனிமொழி, அ.தி.மு.க. மக்களவை உறுப்பினர் திரு. விஜயா, திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் திரு. பிரபாகர் (அ.தி.மு.க.), திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஏ.எல்.எஸ். இலட்சுமணன் (தி.மு.க.), பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மைதீன்கான் (தி.மு.க.), குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் திரு. பிரின்ஸ் (காங்கிரசு), மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் சவாகிருல்லா, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்று, மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தும் கேடுகளை விளக்கிக் கண்டன உரையாற்றினார்.

மாலையில், மூத்த கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி அவர்கள், உண்ணாப் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி, புளியங்குடி செயலாளர் தோழர் க. பாண்டியன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT