உடனடிச்செய்திகள்

Sunday, July 24, 2016

பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


பியூசு மனுசைத் தாக்கிய சிறை அதிகாரிகள் மீது
தமிழ்நாடு முதல்வரும் சென்னை உயர் நீதிமன்றமும்
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!


தமிழ்நாட்டுச் சிறைகள் எந்தளவிற்கு காட்டுமிராண்டிக் காலத்தில் இருக்கின்றன என்பதற்கு சேலம் மக்கள் மன்றத் தலைவர் திரு. பியூசு மனுசை, சேலம் நடுவண் சிறையில் - சிறைக் கண்காணிப்பாளரும் சிறைக் காவலர்களும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதும் சித்திரவதை செய்ததுமே சாட்சியம்!
சேலம் முள்ளூர் கேட் என்ற இடத்தில் தொடர்வண்டி மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்ட போது பொது மக்களுக்கு மாற்று வழி அமைக்காமல் பணிகளைத் தொடங்கக் கூடாதென்று மறியல் போராட்டம் நடத்திய பியூசு மனுசு, ஈசன் கார்த்திக். முத்து ஆகிய மூவரையும், 08.07.2016 அன்று சேலம் காவல்துறையினர் தளைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறை அதிகாரிகளிடம் இம்மூவரும் இந்திய அரசுக் கொடியை எரித்;தவர்கள் என்றும் எனவே இவர்களை அடிக்குமாறும் காவல்துறையினர் கூறியதாகத் தெரிகிறது. அதனால் சிறைக் கண்காணிப்பாளர், இதர சிறை அதிகாரிகள், சிறைக் காவலர்கள் உள்ளிட்ட 30 பேர் மிகக் கொடூரமாகத் தடியால் திரு. பியூசு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். மற்ற இருவரும் 15.07.2016 அன்று பிணையில் விடுதலையான நிலையில், பியூசுக்கு மட்டும் பிணை மறுத்து தமிழ்நாடு அரசு கடுமையாக வாதாடியுள்ளது.

அண்மையில் பிணையில வந்த பியூசு, சிறையில் தமக்கு நடந்த கொடுமைகளை செய்தியாளர்களிடம் சொன்னதுடன், தன்மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் சிறைக்குள் இருந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

பியூசும் அவருடைய தோழர்களும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை. வாதத்திற்காக அவர்கள் அரசுக் கொடியை எரித்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும், சட்டப்படி அதற்குத் தண்டனை தர விதிமுறைகள் இருக்கின்றன. அதைவிடுத்து, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை சிறை அதிகாரிகளும் காவலர்களும் காட்டுமிராண்டித்தனமாய் தாக்குவதற்கு எந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது?

தமிழ்நாட்டுச் சிறைச்சாலைகள் எந்தளவிற்கு மனித உரிமைகளை பலியிடும் கொடூரக் கூடங்களாக இருக்கின்றன என்பதற்கு சேலம் சிறை நிகழ்வு, ஒரு எடுத்துக்காட்டு!
அனைவரும் தம்மை ‘அம்மா’ என்றழைப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகக் கூறிக் கொள்ளும் செயலலிதா ஆட்சியில், சிறைச்சாலைகள் மனித உரிமைப் பறிப்பு பலிபீடங்களாக இருக்கலாமா?

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, சேலம் சிறையில் நடந்த உண்மைகளைக் கண்டறிந்து, அந்தக் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் இடை நீக்கம் செய்ய வேண்டும்.

நீதிபதிகள் அனுப்பும் கைதிகளுக்கானக் காப்புக் கூடங்கள்தான் சிறைச்சாலைகள். அவ்வாறு இருக்கும் போது, நீதிபதியால் காவலுக்கு அனுப்பப்பட்ட பியூசு மனுசுக்கு சிறை அதிகாரிகளால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு நீதித்துறைக்கு இருக்கிறது.

எனவே, பியூசு மனுசை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய நீதிபதியும், சென்னை உயர் நீதிமன்றமும் உடனடியாகத் தலையிட்டு குற்றம் புரிந்த சிறை அதிகாரிகள் - காவலர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில கொடூர நிகழ்வுகளை செய்தித்தாளில் படித்துவிட்டு தாங்களே வழக்காக எடுத்துக் கொள்ளும் நீதிபதிகள், சேலம் சிறைத் தாக்குதல் நிகழ்வைக் கண்டு அமைதி காக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு, பியூசு மனுசு மற்றும் இருவர் மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கைவிடச் செய்ய வேண்டும். மேற்கண்ட ஞாயங்களை நிறைவேற்றி நீதியை நிலைநாட்டுமாறு முதல்வரையும், சென்னை உயர் நீதிமன்றத்தையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT