உடனடிச்செய்திகள்

Saturday, November 10, 2012

பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர் தோழர் பரிதிக்கு வீரவணக்கம்!





பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட
தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்
தோழர் பரிதிக்கு வீரவணக்கம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரான்சு நாட்டு செயற்பாட்டாளர் கேணல் பரிதி என்ற நடராஜா மதீந்தரன் அவர்கள், 08.11.2012 அன்றிரவு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் வாயிலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

1983இல், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, படையணி பயிற்சி பெற்று, பின், மன்னார், யாழ்ப்பாணம், வன்னி பகுதிகளில் புலிகளின் படையணிகளில் பணியாற்றி, விழுப்புண் அடைந்தவர் கேணல் பரிதி. 2003அம் ஆண்டு, பிரான்சு நாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளராக, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தோழர் பரிதியை அமர்த்தினார்.


அதன்பின், புலம் பெயர்ந்த தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து, தமிழீழ விடுதலைக்கான களம் அமைத்து, அதற்கான முயற்சிகளில் முழுவீச்சாக தொடர்ந்து ஈடுபட்டவர் தோழர் பரிதி. பிரான்சு நாட்டின், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு, மாவீரர் நாள் நடைபெறவிருந்த இதே காலகட்டத்தில், சிங்கள உளவாளிகள் தோழர் பரிதியை கத்தியால் குத்திப் படுகாயப்படுத்தப்பட்டார்.

அத்தாக்குதலிருந்து மீண்டு, தமிழர் ஒருங்கிணைப்புப் பணிகளை பார்த்து வந்த தோழர் பரிதி, இவ்வாண்டு பிரான்சில், நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாளையொட்டி நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த வேளையில், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை, மாவீர்ர் நாள் நிகழ்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

தோழர் பரிதியை சுட்டுக் கொன்ற, மர்ம நபர்களை பிரான்சு நாட்டுக் காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். தோழர் பரிதிக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளின் செயல்களால் நின்றிவிடாது. பரிதியின் உயிர்த்தியாகம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு விடுதலை உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் என்பதே உண்மை.

இவண்,
 

இடம்: தஞ்சை
 
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT