உடனடிச்செய்திகள்

Wednesday, November 28, 2012

தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு!


தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் – தொகுப்பு!

நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாள் தமிழகமெங்கும் நினைவுகூறப்பட்டது. ஈகைச்சுடரேற்றி வீரவணக்க நிகழ்வுகள், பொதுக் கூட்டங்கள் என தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் மாவீர்ர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சென்னை
சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 27.11.2012 அன்று மாலை 6.00 மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில், திரளான த.தே.பொ.க தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

முத்துரங்கம் சாலையில், ம.தி.மு.க. சார்பில், மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மல்லை சத்யா, வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் உரையாற்றினர்.

சென்னை முகப்பேரில், தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. த.மு.க. ஒருங்கிணைப்பாளர் தோழர் அதியமான நிகழ்வுக்குத் தலைமையேற்றார். சிறப்பு முகாம் செந்தூரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சென்னை கே.கே.நகரில், விடுதலை சிறுத்தைகள் தலைமை அலுவலகத்தில், கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாவீர்ர் நாள் ஈகைச்சுடரேற்றி வீரவணக்க உரையாற்றினார்.

சென்னை ஆவடியில் நேற்று மாலை, அமைக்கப்பட்டிருந்த மாவீர்ர் நாள் ஈகைத்தூணுக்கு, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், மலர் தூவி மரியாதை செலுத்தினா.




தஞ்சை
தமிழ் கூட்டமைப்பு சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு தஞ்சை கேசட் அரங்கத்தில் மாலை 6.00 மணியளவில் தமிழர் தேசிய இயக்கம் பொதுச் செயலாளர் தோழர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ம.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் திருஞானம், விடுதலை தமிழ் புலிகள் நிறுவுனர் குடந்தை அரசன் உள்ளிட்ட திரளானோர் களந்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செய்லாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் வைகறை, தஞ்சை நகர துணை செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி தஞ்சை நகர செயலாளர் செந்திரள் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துக் கொண்டடு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 27.11.2012 அன்று மாலை 5.00  மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார்.

ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் இரா.நந்தகுமார், த.தே.பொ.க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியச் செயலாளர் காமராசு, தமிழக இளைஞர் முன்ன்ணி ஒன்றியத் தலைவர் தேவதாசு, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தச்சிணாமூர்த்தி, த.இ.மு. நடுவண்குழு உறுப்பினர் த.காமராசு உள்ளிட்டத் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் திரளாக கலந்துக் கொண்டடு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

பூதலூர்
தஞ்சை மாவட்டம் 27.11.2012 அன்று மாலை 5.30  மணியளவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையேற்றார். நாம் தமிழர் கட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அற்புதராஜ், மக்கள் உரிமை இயக்கம் ஒருகிணைப்பாளர் பழ.இராஜ்குமார், ம.தி.மு.க. இலக்கிய அணி புண்ணிய மூர்த்தி, த.தே.பொ.க. ஒன்றிய செயலாளர் தோழர் செந்தில்குமார் உள்ளிட்ட தோழர்களும் தமிழின உணர்வாளர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.


குடந்தை
குடந்தை தெற்கு விதியில் மாவீரர் நாளான 27.11.2012 அன்று மாலை 6 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்முயற்சியில், மேதகு. வே.பிரபாகரன் தானி ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் நிறுத்தம் புதிதாகத் தொடங்கப்பட்டது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி குடந்தை நகர செயலாளர் தோழர் விடுதலை சுடர் அவர்கள் சங்கத்தின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார். இதில், திரளான த.தே.பொ.க. தோழர்களும், தானி ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.

தர்மபுரி
தர்மபுரியில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாவீர்ர் நாள் வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில், அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் மற்றும், கட்சியின் முன்னணியாளர்கள் ஈகைச்சுடரேற்றி உரையாற்றினர்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT