உடனடிச்செய்திகள்

Wednesday, February 20, 2013

காவிரித் தீர்ப்பு: அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!


காவிரித் தீர்ப்பு: 



அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் 



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை



“காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் மட்டும் போதாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதை செயல்படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

காலம் கடந்த்தாயினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்குக் கட்டுப்பட்டு இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளதை, காவிரி உரிமை மீட்புக் குழு வரவேற்கிறது. ஆனால், அத்தோடு நின்று விட்டால் அது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

கடந்த 1991ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் காவிரி தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, நடுவண் அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால், அதனை கடைசி வரை செயல்படுத்தவில்லை கர்நாடகம். 

இப்பொழுது, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளவாறு, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதன் கட்டுப்பாட்டின்கீழ், கர்நாடகத்தின் நான்கு அணைகளையும் நீர்ப்பாசன நிர்வாகத்திற்கு உட்படுத்தினால் தான், இந்த இறுதித் தீர்ப்பு செயலுக்கு வருவதற்கான வாய்ப்பிருக்கிறது. நீர்ப்பாசன நிர்வாகத்தைப் பொறுத்தவரை, காவிரி மேலாண்மை வாரியத்திற்குத் தான் முழு அதிகாரம் இருக்க வேண்டும்.

இப்பயொரு, தன்னாட்சி அமைப்பை உருவாக்காமல் காவிரி அடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதே தமிழகம் கண்ட அனுபவம்.

1998ஆம் ஆண்டு, ஒரு பஞ்சாயத்து சபை போல பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைத்தார்கள். அது முறையாக செயல்படவில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அது அளித்த சில முடிவுகளை கர்நாடகம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு பக்கம். 
எனவே, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதன் கட்டுப்பாட்டில் கர்நாடகாவின் நான்கு அணைகளின் நீர்த்திறப்பு நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தோழமையுடன்,

பெ.மணியரசன்

ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு
தலைவர் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT