உடனடிச்செய்திகள்

Tuesday, September 27, 2011

தென்பென்னை கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!

கிருட்டிணகிரி மாவட்டம் தென்பென்னை கிளைவாய்க்கால் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என ஓசூரில் 25.09.2011 அன்று தமிழ்த் தேசப் பொதுவடைமைக் கட்சி நடத்திய தமிழினத் தற்காப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 தென்பென்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுக

 

கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூர் தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள அளியாலம் சிறு அணைக்கட்டில் இருந்து, பீர்சேப்பள்ளி முதல் லிங்கனம்பட்டிப் பகுதி வரையில் உள்ள 12 ஊராட்சிகளுக்குட்பட்ட ஏரி, குளம், குட்டைகளி்ல், தென்பென்ணை ஆற்று நீரை ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இருமுறை நிரப்புமாறு, கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி உழவர்கள் கோரி வருகிறார்கள்.

 

ஏற்கெனவே, நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதால் வேளாண்மையை கைவிட்டு நகரங்களை நோக்கி பலர் சென்றுவிட்டனர். பலர் தமது நிலங்களை விற்று விட்ட அவலமும் நிகழ்ந்தேறியது. இந்நிலையில், மீதம் உள்ள உழவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, "தென்பென்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு சார்பில் பரப்புரைகள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வமைப்பு சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு 2010 அக்டோபர் மாதத்தில் பதில் அளித்த தமிழக அரசு, நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால், அது நடைபெறவில்லை.

 

தமிழக அரசின் பொதுப்பணித்துறை இத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் இப்பொழுதாவது பரிசீலித்து இத்திட்டத்தை நிறைவேற்றி மண்ணின் மக்களின் வேளாண்மையை பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT