பரமக்குடி – மதுரை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து
சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்
பரமக்குடி – மதுரை ஆகிய இடங்களில் தமிழக அரசின் காவல்துறையால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஏழு பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியக் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும், படுகொலை செய்யப்பட்டோர் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 5 இலட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் தோழா பெ.மணியரசன் அறிவித்தார்.
அதன்படி 16.09.2011 அன்று தஞ்சை மற்றும் மதுரையிலும், நேற்று(18.09.2011) கோவையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று(19.09.2011) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
"கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம், அணிதிரள்வோம் அணிதிரள்வோம் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்" என்பன போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முழக்கங்களைத் தொடர்ந்து, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் தமிழ்க்கனல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான தமிழுணர்வாளர்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - வெளியீட்டுப் பிரிவு
Post a Comment